Monday, September 24, 2012

சில சுவாரஸ்யங்கள்: அப்பா தான் எல்லாத்துக்கும் காரணம்...!!!

மக்களே...!!!

ரொம்ப நாள் ஆச்சி பதிவு போட்டு. இடைவிடாத வேலை, நேரமின்மை இப்படி எவ்வளவோ தடங்கல்களுக்கு மத்தில நம்ம வண்டி ஓடிட்டு இருக்கறதால பதிவு போடறதுல தாமதம் தவிர்க்க முடியாததாயிடுச்சி. 

பதிவுகளுக்கு தேவையான விசயங்களை படிக்கவும், படங்களை தயார் பண்ணவும் செலவழிக்க நேரமின்மையால், செல் அமைப்பு பத்தின பதிவுகளுக்கு கொஞ்சம் இடைவெளி விட நெனச்சிருக்கேன்.அதுவரைக்கும்  நம்ம வலைப்பூவோட மத்த பகுதிகளை கொஞ்ச நாளைக்கு பார்க்கலாம். ஒரு ரெண்டு நாள் முன்னாடி SCIENCE பத்திரிக்கையில பார்த்த ஒரு சுவாரஸ்யமான விசயம் தான் இன்னைக்கு பதிவு. நான் பார்த்தது SCIENCE-லயா இருந்தாலும் அதனோட முழு விவரம் NATURE பத்திரிக்கையில வந்திருக்கு.

அப்பா தான் எல்லாத்துக்கும் காரணம்...!!!

ஒரு குழந்தை பிறக்கும் போது குறைபாடுகளோட பிறப்பதை நாம் பார்த்திருப்போம். நானும் பார்த்திருக்கேன். நெறைய சம்பவங்களை கேள்விப்பட்டு இருக்கேன். படிச்சிருக்கேன். அந்த குறைபாடுகள் எதுவா வேணும்ன்னாலும் இருக்கலாம். ஏதாவது நோயா இருக்கலாம். உடல் வளர்ச்சி குறைவு, மூளை வளர்ச்சி, மன வளர்ச்சி இப்படி பல. இதுக்கெல்லாம் காரணம் என்னன்னு பார்த்தா அதுக்கும் எவ்வளவோ காரணம் இல்லை இல்லை காரணங்கள் இருக்கலாம்.

நோய் கிருமி தாக்குதல், வளர்ச்சிக்கு தேவையான சத்து பற்றாக்குறை, கர்ப காலத்தில் தாய்மார்கள் எடுத்துக்கற அதிகப்படியான மருந்துகள் அல்லது தவறான மருந்துகள் இப்படி பல காரணங்கள். இதுல சொல்லப்படாத முக்கியமான காரணம் மரபியல் குறைபாடு எனப்படும் பரம்பரை வியாதி. அதாவது அந்த குழந்தையின் முன்னோர்களுக்கு இருந்த அதே குறைபாடு குழந்தைக்கும் வருதல்.


இந்த பரம்பரை வியாதியை பத்தி, அது எங்க, எப்போ, எப்படி முன்னோர்கள் கிட்ட இருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுதுன்னு கண்டுபுடிக்க நடந்த ஆராய்ச்சியில கிடைச்ச சுவாரஸ்யமான விசயங்களை தான் இங்க சொல்லப்போறேன்.

1930ல ரொம்ப பிரபலமான மரபியல் விஞ்ஞானியா இருந்த, பிரிட்டனை சேர்ந்த ஜே. பி. எஸ். ஹால்டன் அப்படிங்கறவர் முதன் முதல்ல இது சம்பந்தமான ஆராய்ச்சியை ஆரம்பிச்சி வெச்சார். அப்போ பிரிட்டன்ல இருந்த மக்களுக்கிடையில சில குடும்பங்கள்ல மட்டும் தாத்தா  அப்பா மகன்னு எல்லாருக்கும் ஹீமோபிலியா - HAEMOPHILIA அப்படின்னு சொல்லப்படற இரத்தம் உறையாமை நோய் (இந்த நோய் பாதிப்பு இருக்கறவங்களுக்கு அடிப்பட்டு இரத்தம் வெளியேற ஆரம்பிச்சா அது நிக்கவே நிக்காது. உடல்ல இருக்கிற இரத்தம் முழுமையா வெளியேறி சாக வேண்டியது தான்) இருக்கறதை கவனிச்சார். அது மாதிரி இருக்கற குடும்பங்களை செர்ந்தவன்களோட இரத்த மாதிரிகளை எடுத்து பலவகையான பரிசோதனைகளை செய்து பார்த்தப்போ, அவங்களுக்கு இரத்தம் உறைய தேவைப்படற புரோட்டீன் ஒன்னு சரியா வேலை செய்யாம இருக்கறதையும், அந்த புரோட்டீனை உருவாக்கற ஜீன் மியூட்டேசனால - MUTATION சரியான வேலை செய்யும் திறனுடைய புரோட்டீனை உருவாக்க முடியாம இருக்கறதையும் கண்டுபுடிச்சாரு. அதோட அந்த பாதிக்கப்பட்ட ஜீன் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு அடுத்த அடுத்த பரம்பரையும் அதே நோயால் பாதிக்கப்பட்டு இருக்கு அப்படிங்கறதயும் கண்டுபுடிச்சி சொன்னாரு.

இதுல அவர் சொன்ன சுவாரஸ்யமான விஷயம் என்னன்னா இந்த பாதிக்கப்பட்ட ஜீன் அம்மாவை விட அப்பாகிட்ட இருந்து தான் அதிகமா அடுத்த பரம்பரைக்கு போகுது அப்படிங்கறது தான். அதாவது பாதிக்கப்பட்ட இந்த ஜீன்கள் இருக்கற இடம் X அல்லது Y குரோமோசோம் அப்படிங்கற குழந்தையின் பாலின அடையாளத்தை முடிவு செய்யும் குரோமோசோமா இருந்திட்டா அப்போ கண்டிப்பா அது அடுத்த தலைமுறைக்கு போகக்கூடிய வாய்ப்புகள் ரொம்ப ரொம்ப அதிகம். அப்படி போகும் குறைபாடு உடைய ஜீன்கள் அம்மாவை விட அப்பாகிட்ட இருந்து தான் அதிகம் போகும்.

அது எப்படி...? ஒரு கரு உருவாகும்போது அது தன்னோட பாலின குரோமோசோம்களை XY அப்படின்னு கொண்டிருந்தா அது ஆண் குழந்தையாவும், அதுவே XX அப்படின்னு இருந்தா பெண் குழந்தையாவும் உருவாகும். இந்த XX  அல்லது XY எதுவா இருந்தாலும், ஒன்னு அப்பக்கிட்டயு ஒன்னு அம்மாகிட்டயும் இருந்து வரும். ஆண் குழந்தை உருவாக தேவையான Y குரோமோசோம் அப்பாகிட்ட இருந்து தான் வரணும். அம்மாகிட்ட ரெண்டுமே X  குரோமோசோம் தான். ரெண்டுல எந்த ஒன்னு குழந்தைக்கு வந்தாலும் அது X  தான். ஆனா அப்பா தானோட குரோமோசோம்கள்ல X குடுத்தா அது பெண் குழந்தையாவும், அதுவே Y குரோமோசோமை குடுத்தா அது ஆண் குழந்தையாவும் பிறக்கும் (இப்படி ஆண்கள் தான் ஒரு குழந்தை ஆணா  பெண்ணா அப்படின்னு முடிவு செய்யிறதுல பெரும் பங்கு வகிச்சாலும், அந்த காலத்துல மட்டும் இல்லாம இப்பவும் பெண் குழந்தை பொறந்தா அம்மாவை தான் திட்டிட்டு இருக்காங்க)


இது எதுக்கு சொல்ல ஆரம்பிச்சேன்னா, எப்படி இருந்தாலும்  ஒரு குழந்தை உருவாக இந்த பாலின குரோமோசோம்கள் பெற்றோர்கிட்ட இருந்து குழந்தைக்கு போகணும். அப்படி போகும்போது அந்த குறைப்பாடுகளோட இருக்கிற ஜீன்களும் அப்படியே குழந்தைக்கு கடத்தப்படும். அது மட்டும் இல்லாம இப்படி ஏற்கனவே இருக்கிற மியூட்டேசன்கள்  மட்டும் இல்லாம புது புது மியூட்டேசன்கள் அப்பாக்கிட்ட (அம்மாகிட்ட இருந்து இல்லை ) இருந்து வரலாம்ன்னும் சொல்லியிருக்காங்க.

அது ஏன் அப்பாகிட்ட இருந்து மட்டும், அம்மாகிட்ட இருந்து இல்லை? இதுவே தமிழ் சினிமாவா இருந்தா என்ன பதில் சொல்லி இருப்பாங்க ? ஆனா நான் அப்படி பத்தி சொல்ல முடியாது. ஏன்னா இது முழுக்க முழுக்க அறிவியல். நான் ஆராய்ச்சி பண்ற மாணவன். அப்பா அதாவது ஆண் தன்னோட அடுத்த சந்ததியை உருவாக்க, அதாவது ஒரு குழந்தையை உருவாக்க தன்னோட விந்து செல்களை தன்னோட பங்கா கொடுக்கணும். அம்மா அதாவது பெண் கரு முட்டையை கொடுக்கணும். இந்த ரெண்டும் வேற ஒன்னும் இல்லை. நம்ம உடல்ல இருக்கிற எத்தனையோ வகையான செல்கள்ள இவைகளும் ஒரு வகை செல்கள் அவ்வளவு தான். அதுல எந்த பிரச்சனையும் இல்லை. சரி...எங்க உருவாகுது...? ஆணுக்கு TESTIS -டெஸ்டிஸ் - விரை எனப்படும் தனி உறுப்பும், பெண்ணுக்கு OVARY - ஓவரி - சூல்பை (சூற்பை ) எனப்படும் தனி உறுப்பும் இந்த வேலையை செய்யிது. அதுலயும் எந்த பிரச்சனையும் இல்லை.

சரி... அது எப்படி உருவாகுது...? இங்கதான் பிரச்சனையே...!!! ஆனா, இதை பார்க்கறதுக்கு முன்னாடி ஒரு மியூட்டேசன் எப்படி உருவாகுதுன்னு ஏற்கனவே பார்த்ததை ஒரு தடவை ஞாபகப்படுத்தி பார்த்துக்கலாம். ஒரு செல் தன்னோட சந்ததி அதாவது இன்னொரு புது செல்லை உருவாக்கனும் அப்படின்னா தானே ரெண்டா பிரியும், பிரியனும். அப்படி உருவாகும் புது செல்லுக்கு தேவையான DNA வை தன்னோட DNA வுல இருந்து நகல் எடுத்து கொடுக்கும். அதுக்கு ரெப்ளிகேசன் - REPLICATION அப்படின்னு பேரு. இந்த நகல் எடுக்கும் வேலையில தான் நிறைய தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருக்கு. மியூட்டேசன்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கு. ஒரு செல் திரும்ப திரும்ப பிரிஞ்சிட்டே இருக்கும் போதும், ஒவ்வொரு செல்லுக்கும் ஆயுட்காலம் இருக்கு. அது முடிய முடியவும் இந்த மியூட்டேசன்கள் ஏற்படும் அளவும் அதிகமா ஆவும். இதை நாம ஏற்கனவே விளக்கமா பார்த்திருக்கோம்.

இப்போ நம்ம விசயத்துக்கு வருவோம். முதல்ல கரு முட்டை பத்தி சொல்றேன். கரு முட்டை தான் ஆணோட விந்து செல்களோட சேர்ந்து ஒரு புது குழந்தையை உருவாக்கும். ஒரு பெண் குழந்தை பிறக்கும்போதே தன்னோட சூல்பையில் முழுமையாக வளராத கிட்டத்தட்ட 30000 கரு முட்டைகளோட தான் பிறக்கும். இந்த முட்டைகள் OVARY - சூல்பையில் பாதுக்காப்பா வைக்கப்பட்டு இருக்கும். பருவ வயது வந்ததும், மாசத்துக்கு ஒன்னு அப்படின்னு ஒவ்வொரு முட்டையா, முழுமையா வளர்ந்து சூல்பையில இருந்து கருப்பைக்கு அனுப்பப்படும். அங்க தான் விந்து செல்களோட சேர்ந்து கருவா மாறும்.

இங்க கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா, ஒரு பெண் குழந்தை தன்னோட 12 வயசுல பருவம் அடையிதுன்னு வெச்சிக்குவோம். கருமுட்டை வளர்ந்து கருப்பைக்கு அனுப்பபடறது அந்த பெண் குழந்தையோட 60 வயசு வரைக்கும் நடக்கும்ன்னும் வெச்சிக்குவோம். மாசத்துக்கு ஒரு முட்டை, வருசத்துக்கு 12.  12 வயசுல இருந்து 60 வயசு வரைக்கும் 48 வருஷம். அப்போ அந்த பெண் தன்னோட வாழ்நாளுக்கே மொத்தம் 576 முட்டைகள் தான் தேவைப்படும். இதுக்கு நடுவுல ரெண்டு தடவை கர்ப்பம் அடைஞ்சா கூட அந்த 20 மாசத்துக்கு முட்டைகள் கருப்பைக்கு வராது. அப்போ பெண்கள் தன்னோட சந்ததிகளை உருவாக்க தேவையான, இன்னும் சொல்லப்போனா  தன்னோட தேவைக்கும் அதிகமான முட்டைகளை தான் பிறக்கும் போதே  வெச்சிக்கிட்டு தான் பிறக்கறாங்க.

கரு முட்டைகளும், செல்கள்தான்னாலும் அவைகள் தனக்குள்ள ரெண்டா பிரிஞ்சி புது செல்களை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லவே இல்லை. அந்த செல்களுக்குள்ள ஏற்கனவே ஏதாவது மியூட்டேசன் இருந்தால் ஒழிய புது மியூட்டேசன் ஏற்பட வாய்ப்பே இல்லை.

இப்போ விந்து செல்களை எடுத்துக்குவோம். ஆண் குழந்தை பிறக்கும்போது, ஆணோட விரை - TESTIS முழுமையா வளர்ந்து இருக்காது. ஆண் அப்படின்னு இல்லை, ஆண் பெண்ண ரெண்டு குழந்தைக்கும் அதனோட இனப்பெருக்க உறுப்புகள் முழுமையா வளர்ச்சி அடையாத நிலையில தான் பிறக்கும். ஆண் குழந்தை பருவ வயது வந்ததும் விந்து செல்களை உருவாக்க ஆரம்பிக்கும். ஆனா பெண் குழந்தைகள் தக்குள்ள ஏற்கனவே இருந்த முட்டைகளை உபயோகப்படுத்திக்கிற மாதிரி இல்லாம மத்த செல்கள் மாதிரி புது செல்கள் உருவாகி, அதே எல்லாம் தனக்குள்ள ரெண்டு ரெண்டா பிரிஞ்சி புது செல்களை தரும். இப்படி புது செல்கள் உருவாகும்போது மியூட்டேசன் வர நிறைய வாய்ப்பு இருக்கு. அதே போல இந்த மியூட்டேசன்கள் எண்ணிக்கை ஆணுக்கு வயசு அதிகமா ஆக ஆக இன்னும் அதிகமா ஆகும். குறிப்பா ஆணுக்கு முப்பது வயசுக்கு மேல, ஆகும் ஓவொரு வருசமும் 2.01 மியூட்டேசன்களை தன்னோட அடுத்த சந்ததிக்கு குடுக்கறாங்கன்னு ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுது. இவ்வளவு பிரச்சனைகளை ஆண்கள் தனக்குள்ள வெச்சிக்கிட்டு ஒவ்வொரு விசயத்துக்கும் பெண்கள் மேல குறிப்பா குழந்தைகள் விசயத்துல பழியை போட்டிட்டு இருக்காங்க.

என்ன மக்களே... !!! பதிவு சுவாரஸ்யமா இருந்ததா? உங்க கருத்துகளை கமெண்ட்டுல சொல்லுங்க. இனிமே தவறாம பதிவுகளை போட முயற்சி பண்றேன். அடுத்த பதிவுல சிந்திப்போம்.