Sunday, December 23, 2012

வீடியோ: உடற்கூறுயியல் - ANATOMY AND PHYSIOLOGY - தொகுப்பு - 1

மக்களே...!!! 

போன பதிவுகள் எப்படி இருந்தது ? ஏதாவது உபயோகமா இருந்ததா? சீக்கிரமாவே உயிர்வேதியியல்ல விட்டுப்போன இடத்துல இருந்து எழுத ஆரம்பிக்கிறேன். எல்லாம் நேரமின்மை தான் காரணம்.

உடற்கூறுயியல் பத்தின விளக்க வீடியோ தொகுப்பு கெடைச்சதுன்னு போன பதிவுல சொல்லியிருந்தேன் இல்லையா? அது தான் ஒன்னொன்னா வரிசையா போடபோறேன் கொஞ்ச நாளைக்கு. இன்னைக்கு முதல் வீடியோ. நல்ல விளக்கமான வீடியோங்க எல்லாமே. கண்டிப்பா மிக உபயோகமா இருக்கும். ஆனா, ஒரு பிரச்சனை என்னென்னா எல்லா வீடியோவும் ஆங்கிலத்துல இருக்கு. திரும்ப திரும்ப கேட்டிங்கன்னா கண்டிப்பா புரியும். 
 பாருங்க... என்ஜாய் பண்ணுங்க...!!!


 மறுபடியும் அடுத்த பதிவுல சிந்திப்போம். 



Saturday, December 22, 2012

வீடியோ: மனித உடல் கூறுயியல் - HUMAN PHYSIOLOGY AND ANATOMY - ஒரு அறிமுகம்...!!!

மக்களே...!!!

போன பதிவு இப்போ தான் போட்டேன்.  அதுக்குள்ளே மறுபடியும். சும்மா நெட்ல மேய்ஞ்சிட்டு இருந்தேன்.  ஒரு வீடியோ கெடைச்சது. மனித உடல்ல இருக்கிற ஒவ்வொரு உறுப்பு மண்டலத்தோட வேலைகள் பத்தின தகவல்கள் ஓரளவுக்கு  சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்காங்க. நல்ல அனிமேஷனும் கூட. சாதாரண ஸ்கூல் பசங்க பார்த்தா கூட தெளிவா புரியும். 

மனித உடல் கூறுயியல் பத்தின விளக்கமான வீடியோ தொகுப்பு கெடைச்சிருக்கு. அதுக்கான முன்னோட்டமா கூட இதை எடுத்துக்கலாம். ஒவ்வொரு வீடியோவா குறிப்பிட்ட இடைவெளியில போடறேன். 


இப்போ இதை பாருங்க. என்ஜாய் பண்ணுங்க. முடிஞ்சா பின்னூட்டம் போடுங்க. நாம பார்க்க வேண்டியது இன்னும் நெறைய இருக்கு. சீக்கிரமாவே எழுத ஆரம்பிக்கிறேன். அடுத்த பதிவுல சிந்திப்போம்.

நோபல் பரிசு - NOBEL PRIZE - ஒரு அறிமுகம்...!!!

மக்களே...!!!

அடுத்த பதிவுக்கான நேரம் இது. நானே எதிர்ப்பார்க்கல, அடுத்த பதிவு உடனடியா  போடுவேன்னு...!!! இது எழுதலாம்ன்னு முன்னாடியே பிளான் எல்லாம் பண்ணி டிராப்ட்ல போட்டு வெச்சி ரொம்ப நாள் ஆச்சி. இப்போ தான் நேரம் வந்தது. ஓகே... ரொம்ப அறுக்க போறது இல்ல. நேரிடையா விசயத்துக்கு வரேன்.  எல்லாரும் நோபல் பரிசு பத்தி கேள்விபட்டு இருப்போம். ஒவ்வொரு துறையிலயும் மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளை, அதுலயும் மனித குலத்தின் வாழ்வுக்கு உபயோகப்படும்படியான கண்டுபிடிப்புகளை வழங்கிய விஞ்ஞானிகளுக்கு ஒவ்வொரு வருடமும் வழங்கப்படும் பரிசு இது. 

சுவீடனை சேர்ந்த ஆல்பிரெட் நோபல் (1833-1896) அப்படிங்கற விஞ்ஞானி, 1895வது வருஷம் தன்னோட சொத்துகளை எல்லாம் உபயோகப்படுத்தி இதுமாதிரி பரிசு வழங்கணும் அப்படின்னு எழுதி வெச்சிட்டு செத்து போயிட்டாரு. அதுக்கு அப்புறம் கவர்ன்மெண்ட் ஒரு கமிட்டியை ஏற்படுத்தி 1901ஆம் வருசத்துல இருந்து இதை குடுத்திட்டு வராங்க. இந்த கமிட்டியில SWEDISH ACADEMY - ஸ்வீடன் அகாடமி, NOBEL COMMITTEE OF ROYAL - இராயல் நோபல் கமிட்டி, SWEDISH ACADEMY OF SCIENCE - ஸ்வீடன் அறிவியல் அகாடமி, NOBEL COMMITTEE OF KAROLINSKA INSTITUTE - கரோலின்ஸ்கா நிறுவன நோபல் கமிட்டி, NORWEGIAN NOBEL COMMITTEE - நார்வே நோபல் கமிட்டி அப்படின்னு 5 விதமான கமிட்டி சேர்ந்து பரிசு வாங்கறவங்களை தேர்வு பண்ணும். 



அதுவும் குறிப்பா, சிறந்த கண்டுபிடிப்புகளை வழங்கிய இயற்பியல் - PHYSICS , வேதியியல் - CHEMISTRY , இலக்கியம் - LITERATURE, உலக அமைதி - PEACE , உடற்கூறு இயல் அல்லது மருத்துவம் - PHYSIOLOGY OR MEDICINE மற்றும் பொருளாதாரம் - ECONOMICS ஆகிய துறைகளை சேர்ந்தவங்களுக்கு வழங்கப்படும். இதுல உலக அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நோபல் கமிட்டி குடுக்குது. மத்தது எல்லாம் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த நோபல் கமிட்டி குடுக்குது. சினிமாவுக்கு ஆஸ்கர் அப்படின்னா ரிசர்ச் பண்றவங்களுக்கு நோபல் பரிசுதான் உச்சக்கட்ட லட்சியமா இருக்கும்.   



நோபல் பரிசு அப்படிங்கறது பரிசு பணம் - 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை (தற்போதைய நிலவரப்படி 5.5 கோடி இந்திய ரூபாய்கள்) (வருசா வருஷம் பரிசு பணம் கூடவோ, குறையவோ செய்யலாம். இந்த வருஷம் 1. 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரைக்கும் ), தங்க பதக்கம் - 175 கிராம் சுத்த தங்கம், அலங்கரிக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்ட சான்றிதழ் இதெல்லாம் உள்ளடக்கியது. ஒரே சமயத்துல ஒரே துறையில ரெண்டு பேரு பரிசு வாங்கினா பரிசு பணம் சமமா பிரிச்சி குடுப்பாங்க. பதக்கம், சான்றிதல் தனித்தனியா கெடைக்கும். 



நோபல் பரிசு வழங்கறதுலயும் சில சமயம் காமெடி எல்லாம் நடந்திருக்கு. நெறைய சுவாரஸ்யமான விஷயங்கள் எல்லாம் உண்டு. இது எல்லாம் சேர்த்து,  இதுவரைக்கும் உயிரியல் துறையை சேர்ந்தவங்க என்னென்ன கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு வாங்கியிருக்காங்க, அப்படி என்னென்ன கண்டு புடிச்சாங்க அப்படின்னு விளக்கமா ஒரு தொடரா எழுதலாம்ன்னு இருக்கேன். 

இதை எல்லாம் பார்த்து யாராவது நாமளும் முயற்சி செய்தா என்ன அப்படின்னு நெனச்சா கூட எனக்கு சந்தோசம் தான். அடுத்த பதிவுல சிந்திப்போம்.

Wednesday, December 19, 2012

ஆன்டிபயாடிக்ஸ் - ANTIBIOTICS - நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து - ஒரு அறிமுக பார்வை...!!!

மக்களே...!!!

போன பதிவுல போட்ட வீடியோவுக்கு நல்ல வரவேற்பு. நெறைய பேரு பார்த்திருக்கீங்க. சாதாரணமா நமக்கிடையில, நமக்குள்ள நடக்கிற எவ்வளவோ விசயங்களுக்கு பின்னால இருக்கிற அறிவியல்பூர்வமான உண்மைகள் எவ்வளவு புதுசா, ஆச்சர்யமான ஒண்ணா இருக்கு இல்ல...!!! ஒரு கருமுட்டை இவ்வளவு விசயங்களை பண்ணுதுன்னு பார்க்கும்போது, இயற்கை எவ்வளவு தொலைநோக்கு பூர்வமா ஒவ்வொரு விசயத்தையும் மனித உடல்ல உண்டாக்கி வெச்சிருக்கறதை நெனச்சி ஆச்சர்யபடாம இருக்க முடியல. 

ஓகே மக்களே...!!! விசயத்துக்கு வருவோம்.  ஆன்டிபயாடிக்ஸ் பத்தி நமக்கு நல்லா தெரியும். நாம எல்லாரும் ஒரு தடவையாவது உபயோகபடுத்தி இருப்போம். ஆனா, அதனோட பின்னனி ? ஆக்சுவலா ஆன்டிபயாடிக்ஸ் அப்படிங்கறது என்ன? அதனோட வேதி தன்மை என்ன ? அது எதுக்கெல்லாம் உபயோகபடுத்துவாங்க அல்லது உபயோகப்படுத்தக்கூடாது ? இப்போ ஆன்டிபயாடிக்ஸ் உபயோகபடுத்தறதால உருவாகி இருக்கிற ஒரு முக்கியமான பிரச்னை இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? இதுவெல்லாம் தான் நாம பார்க்க போறோம். இதுல சொல்லவேண்டிய தெரிஞ்சிக்க வேண்டியது ஏராளமா இருக்கு. இப்போ போடறது ஒரு அறிமுக பதிவு தான். இது பல தொடர் பதிவுகளா, தொடர்ச்சியா போகும். எல்லாத்தையும் ஒரே பதிவுல சொல்லிடவும் முடியாது. கொஞ்சம் கொஞ்சமா பார்க்காலாம். ஸோ, இன்னைக்கு பதிவுக்கு போகலாம்.

ஆன்டிபயாடிக்ஸ் - ANTIBIOTICS - நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து - முன் வரலாறு 

 அதென்னவோ மக்களே, நம்ம எல்லாருக்கும், எல்லா உயிரினகளுக்கும் ஒரு பொதுவான குணம், எங்க இருந்து எப்பாடி நம்மகிட்ட ஒட்டிகிச்சின்னு தெரியல, ஆனா இப்போ இருக்கு. அது நாம வாழற , நம்ம ஆளுகைக்கு உட்பட்ட இடத்தை எல்லை வகுத்து பாதுகாத்து வெச்சிக்கறது. இது என்னோட நாடு, இது என்னோட மாநிலம், எங்க ஊரு, என்னோட வீடுன்னு நம்ம இடத்தை பிரிச்சி பாதுகாப்பா வெச்சிக்க நெனக்கிறோம். அந்த இடத்துக்குள்ள வேற யாரும் அத்து மீறி நுழைவதை நாம விரும்பறது இல்லை. அப்படி வேற யாரும் வரதால நம்ம பாதுகாப்புக்கு பங்கம் வரலாம். நமக்கு கெடைக்க வேண்டிய சொத்துல பங்குபோட வேண்டி வரலாம். நம்ம உணவுக்கு பிரச்சனை வரலாம்ன்னு எவ்வளவோ காரணங்கள். இப்படி, அதுக்கு பல காரணங்கள் நாம சொல்வோம். என்ன காரணம் அப்படிங்கறது இங்க தேவையில்ல. இந்த குணம் தான் நாம தெரிஞ்சிக்க வேண்டியது. இந்த குணம் மனுசங்கன்னு இல்லை, நாய், பூனையில இருந்து காட்டுல வாழற சிங்கம், புலி வரை விதிவிலக்கு இல்லாம எல்லாருக்கும் இருக்கு. இவ்வளவு உயிரினங்களுக்கும் இந்த குணம் இருக்கும்போது, இவ்வளவு உயிரினங்களும் தோன்ற அடிப்படையா இருந்த ஒரு செல் உயிர்களுக்கும் அந்த குணம் இருந்திருக்கும் தானே...? குழந்தைகளுக்கு இருக்கிற ஒரு குணம், ஏற்கனவே அதனோட பெற்றோர்களுக்கும்,  அது இருந்திருக்கலாம் தானே...? இருந்திருக்கலாம் என்ன...?  இருந்திருக்கு... இருக்கு....!!! இந்த குணம் தான் ஆன்டிபயாடிக்ஸ் அப்படிங்கற ஒரு அற்புதமான விசயத்துக்கு அடிப்படை.

சிங்கம், புலி ஏன், நம்ம தெருவில இருக்கிற நாய் கூட என்ன பண்ணும் தெரியுமா? தன்னோட கட்டுபாட்ல இருக்கிற ஏரியாவோட எல்லையில இருக்கிற மரங்கள், புதர்கள் இதுங்க மேல எல்லாம் ஒன் பாத்ரூம் போய் மார்க் அடையாளம் போட்டு வெக்கும். இந்த ஏரியாவை சேராத வேற மிருகங்கள் அதனோட வாசனையை மோப்பம் பிடிச்சி, இந்த ஏரியால ஏற்கனவே ஒரு தாதா  இருக்கான்னு புரிஞ்சிக்கணும்.  ஓகே... மிருகங்கள் இப்படி பண்ணும், நாம...? நம்ம இடத்தை காம்பவுண்ட் சுவர் கட்டி பாதுகாக்கறோம். முள்வேலி  போடுவோம். பூட்டு போட்டு பத்திரமா பூட்டி வெக்கிறோம். பேரெழுதி வெக்கிறோம். நாடுகள் எல்லை வகுத்து பிரிச்சி வெச்சிருக்கோம்.

ஆனா ஒரு செல் உயிர்கள்?  அவைகளுக்கும் அதே குணம் இருக்கு. அதுங்களும் கூட்டமா தான் வாழும். நாம பல பேரு சேர்ந்து வாழறோம். அதுக்கு குடும்பம்ன்னு பேரு வெச்சிருக்கோம். பல குடும்பங்கள் சேர்ந்து ஒரு ஊரை உண்டாக்கறோம். அதே மாதிரி தான் பேக்டீரியாவும். பேக்டீரியான்னு இல்லை, பூஞ்சைகள் அது இதுன்னு எல்லா ஒரு செல் உயிர்களும் கூட தான். ஒரு இடத்துல தங்கி வாழ ஆரம்பிக்கிற பேக்டீரியா, இனப்பெருக்கம் பண்ணி புது செல்களை உருவாக்கும். அப்படி உருவாகிற புது செல்களும், தாய் செல்களும் சேர்ந்து ஒரு கூட்டமா தான் வாழும். அப்படி கூட்டமா வாழற செல்கள் எல்லாம் ஒரே மாதிரி இனத்தை, குடும்பத்தை சேர்ந்ததுவா தான் இருக்கும். இதுக்கு நாங்க காலனின்னு - COLONY சொல்லுவோம். உதாரணத்துக்கு சால்மோனெல்லா தைபி - SALMONELLA TYPHI - இது நமக்கு டைப்பாய்டு ஜுரத்தை உண்டாக்கற பேக்டீரியா. அதே மாதிரி வேற ஒரு பாக்டீரியா E.COLI - ஈ.கோலை - இது தண்ணீர்ல வளர கூடிய ஒரு பேக்டீரியா. இந்த ரெண்டும் வேற வேற இனம். ஒரு இனம் தன்னோட காலனிக்குள்ள இன்னொரு இனத்தை வளர அனுமதிக்காது.  இந்த உதாரணம்ன்னு இல்லை, இருக்கிற எல்லா பேக்டீரியாவும் இந்த குணத்தை கண்டிப்பா வெச்சிருக்கு.

இதை எப்படி பண்ணுது...? இந்த எல்லா பேக்டீரியாவும் தான் வாழும் எல்லைக்குள்ள வளர ஆரம்பிச்சதும், ஒரு விதமான வேதி பொருளை வெளியிடும். இந்த வேதிபொருள் அந்த இடத்துல, அது தண்ணியோ, இல்ல நிலமோ எதுவா வேணும்ன்னாலும் இருக்கலாம், முழுதுமா பரவி இருக்கும். இந்த வேதிப்பொருள் அதை வெளியிடற பேக்டீரியாவை தவிர, மத்த பேக்டீரியாவுக்கு விஷம் மாதிரி. அதனால, அந்த குறிப்பிட்ட காலனியை சேர்ந்த பேக்டீரியாவை தவிர வேற எதுவும் வளர முடியாது. இப்படி எல்லா பேக்டீரியாவும் தனக்குன்னு ஒரு, இந்த மாதிரியான வேதிபொருளை வெளியிடற திறமையை கொண்டிருக்கு.  இந்த வேதி பொருள்கள் தான் ஆன்டிபயாடிக்ஸ் - ANTIBIOTICS. அப்படி ஏதாவது ஒரு பேக்டீரியா இந்த வேதிபொருளை எதிர்த்து வளர்ந்ததுன்னா, அந்த ரெண்டு பேக்டீரியாவும்  ஒரே மாதிரியான வேதி பொருளை வெளியிடுதுன்னு அர்த்தம். இந்த போல ஒரே மாதிரியான  ஆன்டிபயாடிக்கை வெளியிடற நெறைய பேக்டீரியாக்களை கண்டுபுடிச்சி இருக்காங்க.

பேக்டீரியா தன்னோட இருப்பிடத்துக்காகவும், உணவுக்காகவும் வெச்சிருக்கிற ஒரு குணாதிசயத்தை மனிதன் தன்னோட நல்லதுக்காக உபயோகப்படுத்திக்கிட்டான். பேக்டீரியா வெளியிடற இந்த ஆன்டிபயாடிக்ஸ் இன்னொரு பேக்டீரியாவை கொல்லும்ன்னு தெரிஞ்சிக்கிட்ட நம்ம ஆளு,  அதை அப்படியே பிரிச்சி எடுத்து தனக்கு தீங்கு விளைவிக்கிற பேக்டீரியாக்களை கொல்ல உபயோகப்படுத்திக்க ஆரம்பிச்சிக்கிட்டான்.  இது தான் ஆன்டி பயாடிக்ஸ்ஸோட முன் கதை சுருக்கம்.

நாங்க லேப்ல எப்படி ஒரு ஆன்டிபயாடிக் எந்த குறிப்பிட்ட பேக்டேரியாவை எல்லாம் கொல்லும் அல்லது வளர விடாம பண்ணும் அப்படின்னு பார்ப்போன்னா, ஒரு பேக்டீரியாவை வளர்க்கற பிளேட்ல பிளேட் முழுசும் பேக்டீரியாவை போட்டு, அதுக்கு நடுவ அங்கங்க ஒரு (ஆன்டிபயாடிக் டிஸ்க் - ANTIBIOTIC DISC அதாவது வேற வேற அளவு, வேற வேற ஆன்டிபயாடிக்ல நல்லா ஊறவெச்ச திக்கான குட்டி குட்டி வட்ட வடிவ பேப்பர்)   ஆன்டிபயாடிக் டிஸ்க் வெச்சிருவோம். அப்புறம் அந்த பேக்டீரியாவை வளர விடுவோம். இப்போ அந்த பேப்பர் டிஸ்க்ல இருக்கிற ஆன்டிபயாடிக், பேக்டீரியா பிளேட்ல டிஸ்க் வெச்ச இடத்துல இருந்து வட்ட வடிவத்துல கரைஞ்சி பரவி இருக்கும். அந்த பேக்டீரியா உண்மையிலேயே அந்த ஆன்டிபயாடிக்னால சாகும் அல்லது வளராதுன்னா, அந்த டிஸ்க் சுத்தி, டிஸ்க்ல இருந்த ஆன்டிபயாடிக் அளவுக்கு ஏத்த மாதிரி குறிப்பிட்ட தூரம் மட்டும் வளராம மத்த இடத்துல எல்லாம் வளர்ந்து இருக்கும். இல்லன்னா, எல்லா எடத்துலயும் எப்பவும் போல, டிஸ்க் ஒட்டி சுத்தியும் வளரும். இதுக்கு ஆன்டிபயாடிக் சென்சிட்டிவிட்டி டெஸ்ட் - ANTIBIOTIC SENSITIVITY TEST அப்படின்னு பேரு. படத்தை பார்த்திங்கன்னா புரியும்.


இந்த படத்துல சரியா என்ன பண்ணியிருக்காங்கன்னு எனக்கு தெரியல. இருந்தாலும் வந்திருக்கற ரிசல்ட்டை பார்த்தா சில விஷயம் தெளிவா புரியிது.

1.  முதல் பிளேட்ல ஸூடோமொனாஸ் பேக்டீரியா நல்லா வளர்ந்திருக்கு.
     டிஸ்க் சுத்தியும் கூட. அப்போ அதுல போட்டிருக்கிற ஆன்டிபயாடிக் அந்த
     பேக்டேரியாவை கொல்லல. கொல்லாது.

2. அடுத்த ரெண்டு பிளேட்ல பேசில்லஸ் மற்றும் ஈ.கோலை. இதுல
   பார்த்திங்கன்னா, சில டிஸ்க் சுத்தி வளர்ந்திருக்கு. சில டிஸ்க் சுத்தி
   கொஞ்சம் தூரத்துக்கு வளரல. சில டிஸ்க் சுத்தி ரொம்ப தூரத்துக்கு வளரல.
   இப்படி மூணு விதமான ரிசல்ட்.

இதுக்கு ரெண்டு விதமான காரணம் சொல்லலாம். ஒன்னு, ஒவ்வொரு டிஸ்க்கும் ஒவ்வொரு விதமான ஆன்டிபயாடிக். எல்லா ஆன்டிபயாடிக்கும் எல்லா பேக்டீரியாவையும் கொல்லாது. சில கொஞ்சம் தடுக்கும். சில நல்லாவே ரிசல்ட் குடுக்கும்.

இன்னொரு காரணம் இப்படியாவும் இருக்கலாம். எல்லா டிஸ்க்கும் ஒரே ஆன்டிபயாடிக்தான். ஆனா, வேற வேற அளவு போட்டிருப்பாங்க. எல்லா ஆன்டிபயாடிக்கும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல இருந்தாதான் பேக்டீரியாவை கொல்ல முடியும். அது என்ன அளவுன்னு கண்டுபுடிக்க இது மாதிரி வேற வேற அளவு போட்டு எந்த அளவுக்கு அப்புறம் பேக்டீரியாவை கொல்லுதுன்னு பார்ப்பாங்க. அது தான், டிஸ்க்ல இருக்கிற அளவுக்கு ஏத்த மாதிரி வேற வேற அளவுக்கு பேக்டீரியாவை தடுக்கிற மாதிரி ரிசல்ட் காமிக்குதுன்னு நெனக்கிறேன்.

3. கடைசி பிளேட்ல ஸ்டெபைலோகாக்கஸ். நல்லாவே தடுக்குது.



ஓகே... இப்போ நம்ம அறிவியல் பூர்வமான வரலாறுக்கு வருவோம். ஆன்டிபயாடிக்ஸ்ஸோட வரலாறு துவங்கினது என்னவோ ஒரு விபத்து மாதிரி தான். ஆனா, அது தான் இப்போ மருத்துவ உலகின் ராஜா. அது ஒரு 1928 செப்டம்பர் மாசத்துல 3ஆம் தேதியோட காலை நேரம். புரபசர் அலெக்ஸாண்டர் பிளம்மிங் அப்படிங்கற விஞ்ஞானி தான் ஆராய்ச்சிக்காக பேக்டீரியா வளர்க்கற பிளேட்ல முதல் நாள் ராத்திரி போட்டு வெச்சிட்டு போன STAPHYLOCOCCUS - ஸ்டேபைலோகாக்கஸ் அப்படிங்கற பேக்டீரியாவை எடுத்து சரியா வளர்ந்திருக்கான்னு எடுத்து பார்த்தார். எல்லா பிளேட்லயும் நல்லா வளர்ந்திருந்தது.   ஒன்னே ஒன்னு தவிர. அந்த ஒரு பிளேட்ல பேக்டீரியாவோட கொஞ்சம் பூஞ்சைகளும் இருந்தது. அந்த பூஞ்சையை சுத்தி ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்கும் இந்த பேக்டீரியா வளரல. எதோ ஒரு கேட் போட்டு நிறுத்தி வெச்சமாதிரி இருந்தது. அப்போவெல்லாம் ஆன்டிபயாடிக்ஸ் அப்படிங்கற ஒன்னே இருந்தது யாருக்கும் தெரியாது. அவருக்கு அதை பார்த்ததும் ரொம்ப ஆச்சர்யமா போயிடுச்சி. என்ன காரணத்தினால அந்த குறிப்பிட எல்லைக்குள்ள பேக்டீரியா வளரலன்னு பார்த்தார். பூஞ்சைகள் என்னவோ ஒரு வேதிபொருளை வெளியிட்டு பேக்டீரியாவை வளர விடாம பண்ணுதுன்னு அவருக்கு புரிஞ்சிடுச்சி. ஆனா, அவரால அப்போ அது என்ன மாதிரியான  வேதிப்பொருள் அப்படின்னு கண்டுபுடிக்க முடியல. பின்னாடி பல வருசங்கள் கழிச்சி, 1941 ஆம் வருஷம் சார்லஸ் ப்ளட்ச்சர் அப்படிங்கற டாக்டர் தான் வெற்றிகரமா அந்த வேதிபொருளை தனியா பிரிச்செடுத்து அது என்னன்னு சொன்னார். அது தான் முதல் ஆன்டிபயாடிக். அது பெனிசிலின் - PENICILLIN. அந்த பூஞ்சை PENICILLIUM NOTATUM.


இன்னைக்கு நம்மகிட்ட எவ்வளவோ ஆன்டிபயாடிக்ஸ் இருக்கு. அந்த ஆன்டிபயாடிக்ஸ்களை, அது வேலை செய்யும் முறை, வேதி அமைப்பு, இப்படி பல காரணங்களை வெச்சி பல வகைகளா வகைப்படுத்தி வெச்சிருக்காங்க.

முதல்ல சில முக்கியமான ஆன்டிபயாடிக்ஸ்களை பத்தி சொல்றேன். அப்புறம் வகைபாடுகளை பத்தி சொல்றேன். நான் இங்க குடுக்கற லிஸ்ட்ல, நாம இப்போ உபயோகபடுத்தர சில முக்கியமான ஆன்டிபயாடிக் மருந்துகள், அது எதுல இருந்து எடுக்கப்படுது, அது என்ன மாதிரியான கிருமிகளுக்கு எதிரா பயன்படுது மற்றும், அது எப்படி இன்னொரு பேக்டீரியாவை அல்லது இன்னொரு ஒரு செல் உயிரினத்தை கொல்லுது மாதிரியான தகவல்களை தரலாம்ன்னு இருக்கேன்.

பெனிசிலின் - PENICILLIN - முன் வரலாறு

பெனிசிலின் தான் முதல் முதல்ல கண்டுபுடிக்கப்பட்ட ஆன்டிபயாடிக். அலெக்ஸாண்டர் பிளம்மிங்க்கும் முன்னாடியே 1896லயே ஒரு பிரெஞ்ச் மருத்துவ மாணவர் இதை பார்த்ததா ரெக்கார்ட்ஸ் இருக்காம். அவருக்கு அப்புறம் தான் பிளம்மிங் கவனிச்சிருக்கார். அப்போ அவங்களுக்கெல்லாம் இதை பத்தி எதுவும் தெரியல. அதுக்கு அப்புறம் பிளம்மிங் சில நோய் உண்டாக்கும் பேக்டீரியாக்களை வளர்த்து அதுக்கூடவே இந்த பூஞ்சையை வெச்சி வளர்த்து பார்த்தார். அந்த நோய் உண்டாக்கும் பேக்டீரியாக்கள் எல்லாம் செத்து போயிடுச்சி. அப்புறம் பிளம்மிங் இந்த கண்டுபிடிப்பை மத்தவங்களுக்கு சொல்லி, இந்த பொருளுக்கு பெனிசிலின் அப்படின்னு பேரு வெச்சார். அதோட இதை சரியானப்படி உபயோகபடுத்தினா நமக்கு நெறைய நோய்களை குணப்படுத்தக்கூடிய மருந்துகள் நமக்கு கிடைக்கும்ன்னு சொன்னார்.

பிறகு அவருக்கு பின்னாடி ஒரு 20 வருடங்கள் அவரோட வேலையை யாரும் கண்டுக்கல. 1939 வது வருஷம் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த ஹோவார்ட் புளோரி அப்படிங்கற விஞ்ஞானி வெற்றிகரமா இந்த பெனிசிலினை பவுடர் வடிவத்துல பிரிச்செடுத்து, அதை மனிதர்கள் உபயோகப்படுத்த முடியும்ன்னு நிரூபிச்சார்.  

ஓகே... வரலாறு போதும். நம்ம முக்கியமான விசயத்துக்கு வருவோம். பெனிசிலின் அப்படிங்கற இந்த ஆன்டிபயாடிக் பெனிசிலியம் நொட்டேட்டம் - Penicillium notatum  அப்படிங்கற பூஞ்சை வகையை சேர்ந்த ஒரு செல் உயிரியால வெளியிடப்படர வேதிப்பொருள். இது பீட்டா - லேக்டம் - ß-LACTAM 
அப்படிங்கற வகையை சேர்ந்த ஆன்டிபயாடிக். இதுதான் இப்போ பொதுவா அடிக்கடி மருத்துவர்களால் சிபாரிசு செய்யப்படர, மக்களால உபயோகப்படுத்தப்படற ஒன்னு. பெனிசிலினோட வேதி கட்டமைப்பு வெச்சி இந்த வகையை உருவாக்கியிருக்காங்க. இந்த வகையை சேர்ந்த எல்லா ஆன்டிபயாடிக்ஸ்களும் அதனோட வேதி கட்டமைப்புல கிட்டத்தட்ட ஒத்திருக்கும். அமினோ அமிலங்கள் ஞாபகம் இருக்கா? அது எப்படி ஒரு பொதுவான வேதி கட்டமைப்போட தனி தனி R - குரூப் வெச்சிருந்ததொ அதே மாதிரி இந்த ஆன்டிபயாடிக்ஸ்களும் பொதுவான பீட்டா - லேக்டம் தொகுதியோட தனி தனி வேலை செய்யும் திறனுடைய R - குரூப் வெச்சிருக்கும். இந்த வகைபாடுகள்ள உள்ள பெனிசிலின் தவிர மற்ற ஆன்டிபயாடிக்ஸ்கள் கீழ,
  • CEPHALOSPORINS - செபாலோஸ்போரின் 
  • CEPHAMYCINS - செபாமைசின் 
  • CARBAPENEMS - கார்பபெனேம்ஸ்   
  • MONOBACTAMS - மோனோபெக்டம்ஸ்
  • BETA-LACTAM INHIBITORS - பீட்டா - லேக்டம் தடுப்பு மருந்துகள்
  •  
     

ஒரு செல் உயிரோட இருக்கணும்னா, அந்த செல்லுக்கு தன்னோட எல்லா செல் நுண்ணுறுப்புகளும் ( செல் சுவர், செல் சவ்வு, மைட்டோகான்ட்ரியா, உட்கரு இதுவெல்லாம் தான் ) மிகசரியா உருவாகனும், அதே மாதிரி அவை எல்லாம் கடைசி வரை பராமரிக்கப்படனும். பேக்டீரியாவோட செல் சுவர் பத்தி, அதுல இருக்கிற பெப்டிடோகிலைக்கன் பத்தியெல்லாம் நாம ஏற்கனவே  படிச்சிருக்கோம். பெனிசிலின் என்ன பண்ணும் அப்படின்னா செல் சுவர்ல இருக்கிற இந்த பெப்டிடோகிலைக்கன் உருவாகற ஒரு முக்கியமான ஸ்டெப்ல போய் உட்கார்த்திட்டு செல்சவ்வோட பெப்டிடோ கிலைக்கன் உருவாகாம தடுத்திடும். அப்போ பெப்டிடோ கிலைக்கன் இருக்காது, அது இல்லாம செல் சவ்வும் இருக்காது. பேக்டீரியாவும் செத்து போயிடும்.  இதை அப்படியே ஒரு அனிமேஷன் வீடியோவா யுடியூப்ல கெடைச்சது.



இதுல ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் - ANTIBIOTIC RESISTANCE பத்தியும் சொல்லப்பட்டிருக்கும். ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் அப்படின்னா ஆன்டிபயாடிக் எதிர்ப்பு குணம் அப்படின்னு சொல்லலாம். ஆன்டிபயாடிக்கே எதிர்ப்பு மறுத்து தான். அதையும் எதிர்க்கிற குணம் அப்படின்னு ஒன்னு இருக்கா அப்படின்னு கேள்வி வருது இல்லை? அப்படி ஒன்னு இருக்கு தான். ஆனா, அதை இந்த ஆன்டிபயாடிக் பத்தின தொடரோட கடைசியில பார்க்கலாம். இப்போதைக்கி இந்த வார்த்தைகளை மட்டும் தெரிஞ்சிவெச்சிக்கோங்க  போதும்.

இதுல இன்னும் சொல்ல நெறையவே இருக்கு. நெறைய விதவிதமான வகைப்பாடுகள், புது புது ஆன்டிபயாடிக்ஸ்கள் அப்படின்னு நாம இன்னும் நெறையவே தெரிஞ்சிப்போம். ஸோ... அடுத்த பதிவுல பார்க்கலாம்.











Saturday, December 8, 2012

வீடியோ: கரு முட்டையும், விந்து செல்லும் சந்தித்தால்...!!!

                     கரு முட்டையும், விந்து செல்லும் சந்தித்தால்...!!!

மக்களே...!!!

மறுபடியும் அதேதான், கடுமையான வேலை பளு காரணமா, நம்ம வலைப்பூவுக்கு தொடர்ந்து எழுத முடியல. நானும் எவ்வளவோ முயற்சி பண்றேன். எப்படியும் மாசம் நாலு பதிவாவது போட முயற்சி பண்றேன். முடியத்தான் இல்ல. இன்னைக்கு இணையத்துல மேய்ஞ்சிட்டு இருந்தப்போ பார்த்த ஒரு தகவல்கள் தான் சில சுவாரஸ்யங்கள் பகுதியோட அடுத்த பதிவு.

இன்றைய சுவாரஸ்யமான வீடியோ மனித கரு முட்டை பத்தினது. ஒரு கரு முட்டையும், விந்து செல்லும் சேர்ந்து ஒரு குழந்தை உருவாகும் அப்படிங்கறது எல்லாருக்கும் தெரியும். ஆனா, ஒரு முட்டை ஒரே ஒரு விந்து செல் கூடத்தான் சேருது. அங்க வெளியிடப்படர இலட்சகணக்கான மற்ற விந்து செல்கள் எதனால அதே முட்டை கூட சேர முடியல. ஏன்..? எப்படி கரு முட்டை முதல் விந்து செல் கூட சேர்ந்ததும் மற்ற செல்களை தன் கூட சேர விடாம எப்படி தடுக்குது? அது தான் இன்னைக்கு சுவாரஸ்யமான விஷயம்.

ஒரு செல்லோட செல் சவ்வு எப்படி இருக்கும்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். நாம படிச்சிருக்கோம். மனித கரு முட்டை கூட அப்படிதான் இருக்கும். அதோட செல் சவ்வுக்கு வெளிய செல்லை சுத்தி சுத்தியும் ஜவ்வு மாதிரியான புரோட்டீன் படலம் இருக்கும். விந்து செல் இதை எல்லாம் தாண்டி தான் முட்டைக்குள்ள நுழைய முடியும். முதல் விந்து செல் கரு முட்டையை தொட்டு அதுக்குள்ளே நுழைஞ்சதும், செல் சவ்வு மேல வேதி வினைகள் நடந்து சுலபமா துளைக்க கூடிய நிலையில இருந்த செல் சவ்வு அமைப்பு மாறி சுலபமா நுழைய முடியாத ஒரு படலம் மாதிரி அமைப்பு தன்னை சுத்தி உருவாக்கிக்கும். அதனால இன்னொரு விந்து செல் அதே முட்டைக்குள்ள நுழைய முடியாது.

ஸீ அர்ச்சின் - SEA URCHIN - கடல் முள்ளேலி அப்படிங்கறது ஒரு சிறிய, உடல் முழுதும் முள்ளு முள்ளா இருக்கிற மாதிரியான, அதே சமயம் ஆண், பெண் வகைப்பாடு இருக்கிற கடல் வாழ் உயிரினம். ஒரு முட்டையும் விந்து செல்லும் சேரும்போது என்ன நடக்குதுங்கற ஆராய்ச்சி இந்த உயிரினங்களை வெச்சி தான் பண்ணினாங்க.


இதை அப்படியே காட்ற  ஒரு வீடியோ கெடைச்சது. பரிசோதனை கூடத்துல வெச்சி, கடல் வாழ் உயிரினம் (SEA URCHIN) கரு முட்டையையும், விந்து செல்களையும் ஒண்ணா சேர்த்து வெச்சி பார்த்தப்போ, நிறைய விந்து செல்கள் ஒரே முட்டையில சேருவது தடுக்க முட்டை என்ன பண்ணுதுன்னு பார்த்திட்டு, அப்படியே வீடியோ எடுத்து வெச்சிருக்காங்க. அதோட முட்டை சைசும், விந்து செல்லோட சைசுக்கும் இருக்கிற வித்தியாசம், ஒண்ணுக்கும் மேற்பட்ட விந்து செல்கள் முட்டைக்குள்ள எப்படியாவது நுழைய முட்டி மோதறதும், சான்சே இல்லை. என்ன ஒரு அற்புதமான வீடியோன்னு நீங்களே பார்த்து என்ஜாய் பண்ணுங்க...!!!



அடுத்த பதிவுல சிந்திப்போம்...!!!