Sunday, January 5, 2014

SLEEP - THE BRAIN'S HOUSEKEEPER? - தூக்கம் - மூளையை சுத்தப்படுத்தும் வழிமுறையா...???

 மக்களே...!!!

ரொம்ப நாள் ஆச்சி, வலைப்பூ பக்கம் வந்து. முழுக்க முழுக்க நேரமின்மை, கூடவே கொஞ்சம் சோம்பேறித்தனம் தான் காரணம். ஆனா, தினம் தினம் நம்ம வலைப்பூவுக்கு வந்து போகும் நண்பர்களும், நம்ம உயிர்நுட்பம் - FACE BOOK பக்கத்தில் தினமும் சேரும் நண்பர்கள் எண்ணிக்கையும் பார்க்கும் போது எழுதாம இருக்கறதுல எனக்கே ஒரு குற்ற உணர்ச்சி எழ ஆரம்பிச்சிடுச்சி. ஸோ, இந்த புது வருசத்தில் நாம மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பிக்கிறோம்.

இப்போ, அனேகமா எல்லாருக்குமே, வேலை நிமித்தம் மட்டும் இல்ல, வேற சில காரணங்களால் நெடு நேரம் கண் விளிச்சிருக்கறது ஒரு வழக்கமா ஆயிடுச்சி. இந்த மாதிரியான தூக்கமின்மை எந்த மாதிரியான விளைவுகளை ஒரு உயிரினத்துக்கு ஏற்படுத்தும், தூக்கம் என்பது உண்மையிலேயே தேவையா அப்படிங்கறதை பத்தி ரொம்ப நாளாவே, நிறைய ஆராய்சிகள் நடந்திட்டு வருது. ஆனா முறையான பரிசோதனைகள் மூலம் யாரும் இதுவரை நிரூபிக்கல. ஆனா, இப்போ சில விஞ்ஞானிகள் அவர்களோட பரிசோதனை முடிவுகளை சமீபத்தில் அறிவிச்சிருக்காங்க. 

இது சம்பந்தமான விளக்கமான ஆராய்ச்சி கட்டுரை அமெரிக்காவை சேர்ந்த SCIENCE அப்படிங்கற அறிவியல் பத்திரிக்கையில வந்திருக்கு. அதை பத்தின இரு விரிவான பார்வை தான் இன்னைய பதிவு. 

மனிதன் அப்படின்னு இல்ல, உயிரினங்கள் குறிப்பிடத்தக்க அளவு பரிணாமம் அடைஞ்ச நாள்ல இருந்து பார்த்திங்கன்னா, ஒவ்வொரு உயிரினமும், தன்னோட அன்றாட வேலைகளான உணவு தேடல், பாதுகாப்பு, இனப்பெருக்கம் இதோட சேர்த்து தூக்கத்துக்கும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு நேரத்தை செலவிட்டுக்கிட்டே தான் இருக்கு. அந்த நேரம் கிட்டத்தட்ட தன்னோட வாழ்நாளின் மூன்றில் ஒரு பங்கு.

நெறைய விஞ்ஞானிகள் தூக்கம் அப்படிங்கறது ஒரு உயிரினத்துக்கு - ஞாபக திறமை, செல்களோட பல்வேறு வேலைகள், நோய் எதிர்ப்பு திறன் இன்ன பிற வேலைகள் சரியான முறையில் நடக்க தேவைப்படுவதாக சொல்லியிருந்தாலும், உலக அளவில் முறையான பரிசோதனைகள் மூலம் யாருமே இதுவரைக்கும் நிரூபணம் செய்யல.

முதன் முறையாக, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள UNIVERSITY OF ROCHESTER - ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி Maiken Nedergaard மற்றும் அவரது குழுவினர் உலக அளவில் அனைத்து விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் தூக்கத்தின் உண்மையான தேவையை முழுமையா அறிவியல் பரிசோதனைகள் மூலம் நிரூபிச்சிருக்காங்க. தூக்கத்தின் முக்கியமான, உண்மையான தேவை - மூளை தன்னுடைய வேலையை செய்யும்போது உருவாகும் தேவையில்லாத, விஷத்தன்மையுள்ள வேதியியல் பொருட்களை வெளியேற்றுவதற்காக மட்டுமே. இந்த சுத்தப்படுத்தும் வேலை தூக்கத்தின் போது மட்டுமே முழுமையாக நடக்கும். தூக்கம் கெடுபவர்களின் மூலையில் இந்த வேதியியல் பொருட்கள் வெளியேற்றப்படாமல் தங்கிவிடும் அப்படின்னு நிரூபிச்சிருக்காங்க.

நம்ம உடலில் மூளையை தவிர, மத்த பாகங்களில் உருவாகும் தேவையில்லாத வேதிப்பொருட்களை சுத்தப்படுத்த இரத்த ஓட்ட மண்டலம், நிணநீர் மண்டலம் இந்த ரெண்டும் பயன்படும். உறுப்புகளின் செல்கள் வரைக்கும் இவை ஊடுருவி பாயும்போது செல்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு பொருட்கள் கரைந்து வெளியேற்றப்படும்.

ஆனால், மூளையில் இதற்குன்னு தனியா ஒரு சிஸ்டம் இருக்கு. நம்ம உடலின் முக்கிய உறுப்புகள் அப்படின்னு சொல்லப்பட கூடிய சிறுநீரகம், கல்லீரல், இதயம், மூளை எல்லாத்துக்கும் ஒரு பாதுகாப்பு உறை இருக்கும். இந்த பாதுகாப்பு உறைக்கும், இந்த உறுப்புகளுக்கும் இடையில ஒரு நீர்மம் பரவி இருக்கும். மூளையிலும் தான். இந்த நீர்மம் இந்த முக்கிய உறுப்புகள் நாம நடக்கும் போது, ஓடும்போது ஏற்படும் பல்வேறு அதிர்ச்சியினால் பாதிக்கப்படாமல் ஒரு SHOCK ABSORBER மாதிரி இருந்து பாதுகாக்கும்.

மூளையில் இதுமாதிரி இருக்க கூடிய நீர்மம் - CEREBROSPINAL FLUID - செரிப்ரோ ஸ்பைனல் ஃபுளூயிட் - CSF. இதுநாள் வரை இந்த நீர்மம்த்தோட வேலை வெறும் ஷாக் அப்சார்பர் மட்டும்தான்னு நெனச்சிட்டு இருந்தாங்க. இப்போ இவங்க இந்த நீர்மம் மூலமாத்தான் மூளை தன்னோட கழிவு வேதிப்பொருட்களை, மனிதன் தூங்கி ஓய்வில் இருக்கும் போது வெளியேத்துதுன்னு கண்டுபுடிச்சிருக்காங்க.


மனிதன் தூக்கத்தில் இருக்கும் போது மூளை வேலை பளு குறைஞ்சி ஓய்வில் இருக்கும் போது இந்த  CSF மூளையின் செல்கள் வரை ஊடுருவி போய் கழிவு வேதிப்பொருட்களை சுத்தபடுத்துது. அதுவே தூக்கம் கெடும்போது CSF ஊடுருவும் அளவு குறைஞ்சி சுத்தப்படுத்தும் வேலை நடக்காது. இந்த சுத்தப்படுத்தும் வேலை தடைப்பட்டால் விஷத்தன்மையுள்ள வேதிப்பொருட்கள் மூளையிலேயே தங்கி பல்வேறு நரம்பு செல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்ப்பட காரணமாகும்.




இன்னைக்கு பதிவு உங்களுக்கு புடிச்சிருக்கும்னு நம்பறேன். படிச்சிட்டு உங்க கருத்துக்களை பின்னூட்டத்தில் சொன்னா சந்தோசப்படுவேன். மறுபடியும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

NOTE: இந்த பதிவை வாசகர்கள் எவ்வளவு நாள் கழித்து படித்தாலும், பின்னூட்டம் போட தவற வேண்டாம். FACE BOOK பக்கத்திலும் இந்த பதிவுகள் காணக்கிடைக்கும்.