Sunday, April 22, 2012

செல் - சில உண்மைகள் - பகுதி - 2

மக்களே...!!!

இது போன பதிவோட தொடர்ச்சி... இன்னும் செல் கட்டமைப்பு பதிவுக்கான படங்களை என்னால சேகரிக்க முடியல... சீக்கிரமே அதை முடிச்சிடறேன். அதோட நம்ம மக்களோட பின்னூட்டங்கள் கடந்த ரெண்டு பதிவுகளா பார்க்க முடியல. நான் எழுதறது சரியா இல்லையா இல்லை வேறு எதுவும் காரணமா..? 

எதுவும் பின்னூட்டத்தில் தெரியபடுத்தினா, சரிசெய்ய முயற்சிக்கிறேன்.  இப்போ பதிவை தொடரலாம்.

3 . செல் பத்தின அடுத்த ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னன்னா, இப்போ நம்மளோட உடம்புல இருக்கிற செல்களோட எண்ணிக்கையை விட நம்மளோட உடம்புல இருக்கிற பேக்டீரியாவோட எண்ணிக்கை அதிகம். அதுலயும் முக்கால்வாசி பேக்டீரியா நம்மளோட ஜீரண மண்டலத்தில (வாய் தொடங்கி, ஆசன வாய் வரை) தான் இருக்கு. 

4 . புரோகேரியோட் மற்றும் யுகேரியோட் செல் ரெண்டு வகை செல்களிலும் DNA  இருக்கு. இந்த DNA வில்தான் ஒரு செல் உருவாகறது தொடங்கி, அதன் செயல்பாடு, இனபெருக்கம் கடைசியா செத்து போற வரைக்கும் எல்லா செயல்களுக்குமான தகவல்களை கொண்டிருக்கும். இந்த தகவல்களை ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறை செல்களுக்கு கடத்தவும் செய்யும். சில செல்கள் உதாரணம் சில வைரஸ்களில் RNA மட்டும் தான் இருக்கும். இந்த RNA வே DNA வோட வேலையை செய்யும். உதாரணம் HIV (எய்ட்ஸ் வைரஸ் தாம்பா...!!!)

நூலை சுத்தி நூல்கண்டாக்கி நாம பாதுகாப்பா வெக்கிற மாதிரி, DNA சுத்தி குரோமோசோம் அப்படிங்கற பேர்ல நம்ம செல் உட்கருவுக்குள்ள பாதுகாப்பா வெச்சிருக்கு. ஒரே ஒரு மனித செல்லுக்குள் இருக்கிற DNA வை நீளமா பிரிச்சி வெச்சா பூமியில் இருந்து நிலா வரைக்கும் வரும்ன்னு எங்க டீச்சர் எங்களுக்கு பாடம் நடத்தும்போது சொல்வாங்க.

ஆனா, நான் ஒரு காமெடிய இப்போ வந்த ஏழாம் அறிவு படத்தில பார்த்தேன். ஒரு செல்லோட சைஸ் என்ன? அதுக்குள்ளே இருக்கிற உட்கரு அதாவது நியுக்ளியஸ் சைஸ் என்ன? அப்போ அதுக்குள்ளே இருக்கிற DNA சைஸ் என்ன? 100000 மடங்கு அதிகப்படுத்தி காட்டும் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் வழியா பார்த்தாலே DNA ஒரு நூல் மாதிரி இல்லன்ன, பென்சில்ல கொடு போட்டமாதிரி தான் தெரியும். DNA வோட ஒரிஜினல் அமைப்பை நேரிடையா (மைக்ராஸ்கோப் வழியா கூட ) கண்ணால் பார்த்தவங்க இதுவரைக்கும் யாருமே கிடையாது.  ஆனா, அந்த படத்து கதாநாயகி ஒரு சாதாரண மைக்ராஸ்கோப் வழியாவே DNA வோட ஒரிஜினல் அமைப்பை பார்க்கறாங்க. அதிகபட்சம் குரோமோசோமை ஸ்கெட்ச்சில கோடு போட்ட மாதிரி பார்க்கலாம். எவ்வளவு அபத்தமா காட்டியிருக்கிறோம்ன்னு அவங்களுக்கே தெரியுமான்னு தெரியல. எல்லாம் நம்ம தலைஎழுத்து....!!!!!


5 . ஒரு செல் இனபெருக்கம் (REPRODUCTION ) செய்து புது செல் உருவாக்கும்ன்னு சொல்லியிருக்கேன். அது எப்படிங்கிறதையும் மேலோட்டமா பார்த்திடுவோம். மேம்படுத்தப்பட்ட உயிரினங்களில் உள்ள செல்கள் அதாவது நம்ம உடல் செல்களில் ரெண்டு வகை உண்டு. ஒன்னு உடல் செல்கள். இந்தவகை செல்கள் நம்ம உடல் உறுப்புகள் உருவாக்கத்துல பயன்படுத்தப்படுது. ரெண்டாவது வகை, இனப்பெருக்க செல்கள். இந்த செல்கள் மனிதனோட இனப்பெருக்கத்துக்கு பயன்படறது (கவனிக்க, மனிதனோட இனப்பெருக்கத்துக்கு... செல்களோட இனப்பெருக்கத்துக்கு அல்ல...). 

இந்த ரெண்டுவகை செல்களும் இனப்பெருக்கம் செய்து புதிய செல்களை உருவாக்கும். இந்த இனப்பெருக்கம் செய்யும் முறை மேம்படுத்தப்பட்ட உயிரினங்களில் செல்களின் வகையை பொறுத்து ரெண்டு வகையா சொல்லலாம். முதலாவது ஒரு செல் இன்னொரு செல்லின் உதவி இல்லாமல் செய்யும் (ASEXUAL REPRODUCTION ) இனப்பெருக்கம். இந்த வகை இனப்பெருக்கத்தில், தேவையை பொறுத்து ஒரு செல் தனக்குள்  இரண்டாக பிரிந்து இரு புதிய செல்களை உருவாக்கும். அப்படி உருவான புதிய செல்களில் தன் தாய் செல்லில் இருக்கும் அத்தனையும் தவறாமல் கொண்டிருக்கும். முக்கியமாக, அதே 46 எண்ணிக்கை உள்ள குரோமோசோம்கள் அப்படியே கொண்டிருக்கும். இந்த முறை இனப்பெருக்கம் மேம்படுத்தப்பட்ட யுகேரியோட்ஸ்  செல்களில் மைட்டாசிஸ் (MITOSIS) என்றும் மேம்படுத்தப்படாத  புரோகேரியோட்ஸ்  செல்களில் பைனரி பிஷ்ஷன் (BINARY FISSION ) என்றும் பெயர்.

               THANKS TO: mrsdlovesscience.com AND ghr.nlm.nih.gov
ஆனால் இனப்பெருக்க செல்களில் (பெண்ணின் முட்டை மற்றும் ஆணின் விந்து செல்களில் மட்டும் ) நடக்கும் இனப்பருக்கம் வேறு மாதிரி. இனப்பெருக்கத்தின் போது, உடல் செல்களில் நடக்காத ஆனால் இனப்பெருக்க செல்களில் நடக்கும் விஷயங்கள் கீழே பார்க்கலாம்.
  • இரண்டு செல்கள் இணைந்து புதிய செல்கள் உருவாகும். ஆனால் உடல் செல்கள் அப்படியே இரண்டாக பிரிந்து புதிய செல்களை          உருவாக்கும்.
  • இனப்பெருக்க செல்கள்  இணைந்து 4 புதிய செல்கள் உருவாகும். தாய் செல்கள் இனப்பெருக்க செல்கள் என்பதால் உருவாகும் எல்லா 4    செல்கள் ஒன்றாக வளர்ந்து புதிய குழந்தையாக வளரும். இதுவே அந்த 4 செல்கள் தனித்தனியாக வளர்ந்தால் தனி தனி 4 புதிய    குழந்தைகளை தரலாம். ஆனால் உடல் செல்களில் ஒவ்வொன்றும் இரண்டு புதிய செல்களை உருவாக்கும்.   
இந்த இனப்பெருக்க முறைக்கு மியாசிஸ் செல் பிரிதல் என்று பெயர். புரோகேரியோட்ஸ் செல்களில் இனபெருக்க செல்கள் எனத் தனியாக ஒன்றும் இல்லையாதலால் அதில் மியாசிஸ் என்பது கிடையாது. 

6 . நமது எல்லா செல்களுக்கும் ஆயுட்காலம் என்பது ஒன்று உண்டு. புதிதாக பிறக்கும் ஒவ்வொரு செல்லும் அந்த குறிப்பிட்ட ஆயுட்காலத்துக்குபிறகு இறந்து விடும். இந்த நிலையில் புதிய செல்கள் அந்த செல்களுக்கு பதிலாக உருவாகும். வயதாகி இறக்கும் செல்களுக்கு பதிலாக உருவாகும் செல்கள் மேற்சொன்ன முறை இல்லாமல் அதற்கென தனி வழி உண்டு. அதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் காணலாம். 

7 . இப்போது ஒரு முக்கியமான தகவல். நமது செல்கள் தற்கொலை செய்யும் தன்மை கொண்டவை. அதாவது நமது செல்களில் நிறைய கிட்டத்தட்ட 3000  விதமான ப்ரோடீன்கள் உண்டு. இவற்றில் ப்ரோடீன்களை, கார்போஹைட்ரேட்களை, DNA மற்றும் RNA போன்றவற்றை ஜீரணம் செய்யும் என்சைம்களும் அடக்கம். இந்த புரோடீன்கள் நேரிடையாக ரத்தத்தில் கலக்க கூடாது. அப்படி கலக்க வேண்டிய சூழ்நிலை உருவானால் அதற்க்கான தகுந்த பாதுகாப்போடு மட்டுமே கலக்க வேண்டும். ஆனால் தவறுதலாகவோ, ஏதாவது நோய் தாக்குதலாலோ செல்கள் சேதமடைந்து செல்லுக்குள் இருக்கும் இவை ரத்தத்தில் கலந்தால், ரத்தத்தில் உள்ள புரோடீன்கள் ஜீரணிக்கப்பட்டு விடும். 

இந்த விபரீத நிலையை தவிர்க்க நமது சிஸ்டம் வைத்துள்ள ஒரு ஏற்பாடு தற்கொலை செய்வது. செல்கள் வயதாகி விட்டாலோ, அல்லது ஏதாவது நோய்கிருமி தாக்குதல் ஏற்பட்டாலோ உடனடியாக, தற்கொலை முறை தூண்டப்பட்டு சிறு சிறு குமிழ்களாக உடைந்து அதே சமயம் தனக்குள் இருக்கும் எந்த விதமான என்சைம்களும் ரத்ததுக்குள் சிந்திவிடாமல் இறந்து போகும். இது போன்ற சிறு துண்டு செல்களை ஜீரணிப்பதர்க்காவே உள்ள செல்கள் அந்த உடைந்த சிதறல்களை ஜீரணித்து விடும். இந்த தற்கொலை முறைக்கு அபப்டோசிஸ் (apoptosis) என்று பெயர். இதனால் உடலின் வழக்கமான செயல்கள் பாதிக்கப்படாது.
சில செல்கள் நோய் அல்லது சில காரனகளால் சேதமடைந்து செல்லுக்குள் உள்ளவற்றை ரத்தத்தில் கொட்டிவிட்டு இறந்து போகும். இதனால் உடலின் செயல்பாடு பாதிப்படையும். இந்த முறை செல் இறத்தலுக்கு நெக்ரோசிஸ் (Necrosis) என்று பெயர். 


                               THANKS TO: http://kaomp.org
எப்படி இன்றைய பதிவு...? நெறைய கமெண்ட்ஸ் போடுங்க... அது இன்னும் நிறைய, நல்ல பதிவுகளை எழுத உதவும். அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

4 comments:

  1. It is really amazing to see your dedication in collecting the data, pictures and translate in tamil. I am very much impressed in your way of presenting. these are very useful information and I am enjoying to read this in my mother tongue. Thanks a lot.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பிலிப்... என்னை வளர்த்த உயிர்வேதியியலுக்கு இது என்னால செய்ய முடிஞ்ச ஒரு சின்ன நன்றி...

      ஆனா, தமிழ்ல அதுவும் பேச்சு வழக்கு தமிழ்ல எழுத நான் முடிவு செஞ்சதுக்கு காரணம், நானும் காலேஜ்ல தமிழ் மீடியம் இங்கிலீஷ் பிரச்சனையில கொஞ்சநாள் ரொம்பவே கஷ்டப்பட்டவன் தான்... செந்தமிழை விட பேச்சு வழக்கு தமிழ் படிக்கிறவங்களை இன்னும் நெருக்கமா உணர வைக்கும் அப்படிங்கறது என் கருத்து...

      உங்க கருத்துக்கு நன்றி...!!!

      Delete
  2. நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் இவ்வாறான அறிவு பூர்வமான தளத்தில் பின்னூட்டம் இடுபவர்கள் குறைவுதான். ஏதோ எழுதுபவற்றிற்கு எழுபது என்பது பின்னூட்டங்கள் வந்து விழும். ஆனாலும் இது போன்ற பதிவுகளே இணையத்திற்கு தேவையானது. உங்கள் தளத்தை இன்றுதான் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. உங்கள் பணியை மனதாரப் பாராட்டுகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம். உயிர்நுட்பம் தற்போது தனி வலைதளமாக செயல்படுகிறது. புதிய தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

      http://uyirnutpam.in/

      Delete